உலகத் தமிழாராய்ச்சி நிறுவன பொன்விழா (1970-2020) தொடக்க விழா

நிகழ்வு நாள் : 21.10.2020

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

பொன்விழா ஆண்டை முன்னிட்டு மாதந்தோறும் 50 அரிய நூல்கள் கண்டறிந்து வெளியிடப்படும்
ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுகலைத் தமிழ் பட்டப்படிப்புக்கு இனி கட்டணம் இல்லை
மாண்புமிகு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் அவர்கள் அறிவிப்பு.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட்டு, 50 - ஆண்டுகள் ஆன நிலையில் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சிகள் நிறுவன தோற்றுவிப்பு நாளான இன்று (21.10.2020) சென்னை, தரமணியில் இந்நிறுவனத்தின் பேரறிஞர் அண்ணா கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றன. காலை 11 மணிக்கு நடைபெற்ற தொடக்க விழாவில் மாண்புமிகு தமிழ் ஆட்சி மொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு க. பாண்டியராஜன், கலந்துகொண்டு இந்நிறுவனத்தை நிறுவிய பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு, மாலை அணிவித்தும் இந்நிறுவனத்திற்கான கருத்துருவை வழங்கிய தனிநாயகம் அடிகளாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தினார். இந்நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் வரவேற்புரைஆற்றினார். மொழியியல்புல இணைப் பேராசிரியர் முனைவர் பெ. செல்வகுமார் முன்னிலை உரை வழங்கினார். தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலர் திரு. மகேசன் காசிராஜன். இ.ஆ.ப. கலந்துகொண்டு தலைமையுரை ஆற்றினார்.
அடுத்து, சுவாமி சுப்ரமணியம் அவர்களின் தலைமையில் செயல்படும் வள்ளலார் ஆய்விருக்கையைத் தொடங்கி வைத்து, மாண்புமிகு தமிழ்வளர்ச்சி, பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு க. பாண்டியராஜன் அவர்கள் விழாச் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசும்போது, தமிழ் ஆய்வுலகில் பிரெஞ்சு மொழிக் கலைக் கழகத்திற்கு நிகரானதாக ஒரு ஆய்வு நிறுவனத்தைத் தமிழ் மொழிக்காக நிறுவவேண்டும் என்று பேரறிஞர் அண்ணா விரும்பினார். தமிழ்த்தூதர் என்று அழைக்கப்படும் தமிழறிஞர் தனிநாயகம் அடிகள் அதற்கான கருத்துருவை வழங்கினார். எண்ணற்ற தமிழாய்வுத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்முறைப்படுத்தி 50 - ஆம் ஆண்டில் வெற்றிப் பயணம் தொடர்கின்ற இந்நிறுவனத்தின் பொன்விழாவினை இன்று கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தலைமையில் ஆட்சியமைந்த கடந்த 9 – ஆண்டுகளில் எண்ணற்ற அரிய, ஆய்வுப் புத்தக வெளியீடுகள், பல்வேறு தேசிய, பன்னாட்டுக் கருத்தரங்குகள், தமிழை வளப்படுத்தும் ஆய்விருக்கைகள் நிறுவி, தமிழாய்வு உலகில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வந்திருப்பது பாராட்டத்தக்கது.
இனி, அடுத்து வரும் முக்கிய மூன்று அறிவிப்புகளாக, தமிழ்ப்பல்கலைக் கழக ஏற்புப் பெற்ற ஒருங்கிணைந்த முதுகலைத் தமிழ் பட்டய வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கான கட்டணமில்லாக் கல்வி இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும். தமிழின் வளத்துக்கும் நலத்துக்கும் பலம் சேர்க்கும் 50 – அரிய நூல்கள் நிறுவனப் பதிப்புத் துறையின் மூலம் ஆண்டுதோறும் பதிப்பித்துப் புதுப்பிக்கப்படும்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனப் பொன்விழா ஆண்டுமலர் மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்று அவர் அறிவித்தார். முடிவில், எம்.ஜி.ஆர். கலை மற்றும் சமூகவியல் மேம்பாட்டு ஆய்விருக்கையின் ஆய்வு உதவியாளர் முனைவர் ஈ. விசய் நன்றியுரை நவின்றார். இந்நிகழ்ச்சியை இளந்தமிழர் இலக்கியப் பேரவை நிறுவனர் சட்டம். மு. முனீசுவரன் தொகுத்து வழங்கினார்.
இவ்விழாவில், எம்.ஜி.ஆர் கலை (ம) சமூகவியல் மேம்பாட்டு ஆய்விருக்கை பொறுப்பாளர் முனைவர் ம.செ. இரபிசிங், அம்மா தமிழ்ப் பீட நிறுவனர் திரு. ஆவடிக் குமார், புலவர் வெற்றியழகன், பாரதி சுகுமாரன், பாக்கம் தமிழன், இதயகீதம் இராமானுஜம், தமிழார்வலர் விசய. சக்தி சேதுபதி, நந்திவரம் பா. சம்பத்குமார், நிறுவனப் பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் மற்றும் தமிழார்வலர் பலர் கலந்து கொண்டனர்.


படச்செய்தி

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன பொன்விழா (1970-2020) தொடக்க விழாவில் இன்று (21.10.2020) மாண்புமிகு தமிழ் ஆட்சி மொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு. க. பாண்டியராஜன் அவர்கள் சிறப்புரையாற்றினார். உடன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசுச் செயலாளர் திரு. மகேசன் காசிராஜன், இ.ஆ.ப., மற்றும் திரு. ஆவடி குமார்.