தொல்காப்பியப் பதிப்புகளும் ஆய்வுகளும்

நிகழ்வு நாள் : 05.02.2021

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் பிப்ரவரித் திங்கள் முழுமையும் தமிழ்த்தாய் 73 தமிழாய்வுப் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று ஐந்தாவது நாளாக (05.02.2021) பிற்பகல் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆய்வறிஞர் முனைவர் மு.செல்வதுரை, இளநிலை ஆராய்ச்சி அலுவலர், மொழியியல் இலக்கியத்துறை அவர்கள் ‘தொல்காப்பியப் பதிப்புகளும் ஆய்வுகளும்’ என்ற பொருண்மையில், தமிழினத்தின் பண்பாட்டுக் கருவூலமாகக் கருதப்படும் தொல்காப்பியத்தின் பழமையிலேயே தமிழினத்தின் பெருமை அடங்கியிருப்பதாக எண்ணி, தொல்காப்பிய ஆய்வு காலந்தோறும் பல்வேறு வகைகளில் வளர்ந்து வருகிறது என்றார். இத் தொல்காப்பிய ஆய்வின் வரலாற்றையும் வளர்ச்சியையும் கண்டறிய ‘தொல்காப்பியப் பதிப்புகள்’ பற்றிய ஆய்வும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் காலந்தோறும் சமகால மொழியியல் வளர்ச்சியின் தாக்கங்களையும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றி வளர்ந்த ஒப்பிலக்கண வரலாற்று மொழியியலின் தாக்கத்தையும் தொல்காப்பிய ஆய்வில் மேற்கொண்டு பல அறிய கண்டுபிடிப்புகளைக் கருவூலமாக இச் சிறப்பு சொற்பொழிவு அமைந்தது. தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநருமான முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் தலைமையேற்க உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தமிழ் இலக்கியம் (ம) சுவடியியல் புலம், உதவிப்பேராசிரியர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் அவர்கள் முன்னிலை வகித்தார். அறக்கட்டளைப் பொறுப்பாளரும் தமிழ்மொழி(ம) மொழியியல் புலத்தின் இணைப்பேராசிரியருமான முனைவர் பெ. செல்வக்குமார் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். அயல்நாட்டுத் தமிழர் புலம் உதவிப் பேராசிரியர் முனைவர் து.ஜானகி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர் ஆ.சாருமதி நன்றியுரை கூறினார். ஆய்வாளர் த. இராகுல்காந்தி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.